Search This Blog

Showing posts with label புளிகுழம்பு. Show all posts
Showing posts with label புளிகுழம்பு. Show all posts

Sunday, August 10, 2014

Vendaikkai Puli Kuzhambu

#வெண்டைக்காய் #புளிகுழம்பு :  #குழம்பு என்றால் பருப்பு சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார் என்று கூறலாம். எனது அண்டை வீட்டின் தோட்டத்தில் பல  காய்கறிகளை விளைவித்து கொண்டு இருக்கிறார்கள். அதில் வெண்டைக்காய் நன்கு விளைந்துள்ளது. என்னுடைய வீட்டில் கீரைகளே அதிகம் காணப்படுகிறது. அதிலும் புதினா மிக அதிகமாக படர்ந்துள்ளது. நான் புதினா செடிகளை அண்டை வீட்டாருக்கு வழங்க அவர்கள் வெண்டைக்காயை பண்டமாற்றாக அளித்தார்கள்.
வெண்டைக்காய் கறியை இரண்டு நாட்களுக்கு செய்தேன். இருந்தாலும் காய் தீரவில்லை. சாம்பார் செய்யும் போதும் தாராளமாக போட்டும் காலியாகவில்லை.
வெண்டைக்காயில் வேறு என்ன  முயற்சி செய்யலாம் என  எனது தம்பியின் மனைவியிடம் கேட்ட போது இந்த சமையல் குறிப்பை கூறினார்கள். அதனை பின்பற்றி செய்து பார்த்தேன். அருமையாக இருந்ததால் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
அதனை இங்கு காண்போம்.


தேவையான பொருட்கள் :
8                                                  வெண்டைக்காய், ஒரு அங்குல துண்டுகளாக்கவும்.
15 - 20                                        சின்ன வெங்காயம், தோலுரித்து நறுக்கி வைக்கவும்.
சின்ன நெல்லிக்காய் அளவு புளி வெது வெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
3 Tsp குவித்து                          சாம்பார் மிளகாய் தூள் 
1 Tsp                                            மல்லித்தூள்
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 Tsp                                            உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1 Tsp                                          கடுகு
1/4  Tsp                                     வெந்தயம்
2  Tsp                                         கடலை பருப்பு
2 சிட்டிகை                           பெருங்கயத்தூள்
10                                             கருவேப்பிலை

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் கடலை பருப்பு, வெந்தயம் சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காய தூள் சேர்த்தவுடன் கருவேப்பிலையை பிய்த்து போட்டு வெங்காயத்தை சேர்க்கவும்.


சாரணியால் திராவி விடவும்.

மற்றொரு அடுப்பில்மிதமான தீயில் குக்கரை வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்க்கவும்.

இப்போது வதங்கி கொண்டிருக்கும் வெங்காயத்துடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கிய அனைத்தையும் குக்கரில் கொட்டவும்.


புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து குக்கரில் வடிகட்டவும்.
குக்கரை மூடி விசில் வைக்கவும்.
அதிக தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு நீராவி அடங்குவதற்காக காத்திருக்கவும்.

ஆவி அடங்கிய பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


இந்த குழம்பு சின்ன வெங்காயத்தின் வாசனையுடன் வெண்டைக்காயின் சுவையுடன் அருமையாக இருக்கும்.
பருப்பு அல்லது பருப்பு பொடி சாதத்துடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.