Search This Blog

Monday, November 30, 2020

வில்வப்பழப்பானம்

 வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ] : 

Bael fruit juice - வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ]

வில்வம் அல்லது வில்வமரம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் ஸ்தலவிருட்சமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். நமது பெரியவர்கள் வில்வ இலைக்கொண்டு சிவனை பூஜித்தால் நல்ல பலனையடையலாம் எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதன் மகத்தான மருத்துவ குணங்களைப் பற்றி சொன்னதேயில்லை. நானும் கோயிலுக்கே உரிய மரம் போலும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்.

வில்வம் அல்லது வில்வமரம் - Bael tree

சென்ற ஆண்டு எனது கணவர் பணி நிமித்தமாக மாறுதல் பெற்றதால் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சித்தரஞ்சன் என்ற பெயர் கொண்ட ஒரு நகருக்கு குடி பெயர்ந்தோம். எங்களது வீட்டைச்சுற்றி மா, பலா, வாழை, அத்தி, கொடுக்காப்புளி, நாவல், முருங்கை, வேப்பம், இலந்தை மற்றும் பெயர் அறியாத பலவகை மரங்களுடன் ஒரு பெரிய வில்வ மரமும் உள்ளது. சென்ற வருடம் ஜூன் மாதத்தில் எனது கணவர் சித்தரஞ்சன் வந்து விட்டார். இந்த மரத்தின் காய்கள் கோடைகாலத்தில் காய்க்கும். கோடை முடியும் தருவாயில் சித்தரஞ்சனுக்கு குடி பெயர்ந்ததால் அவரால் வில்வப்பழத்தை சுவைக்க முடிந்தது.அப்போது எனது கணவர் கைபேசியில் பேசும்போது வில்வப்பழத்திலிருந்து சாறு எடுத்து சுவைத்ததாக கூறினார். அதன் பழச்சாறு நிரம்பிய கண்ணாடி குவளையின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். பழச்சாறின் நிறம் கேரட்டைப் போல கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டிருந்தது. அப்போதுதான் வில்வ மரத்தின் பழங்கள் சுவைப்பதற்கு உகந்தவை எனத் தெரிந்தது. நான் சித்தரஞ்சனுக்கு ஜூலை மாதத்தில்தான் வந்தடைந்தேன். அப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. வில்வப்பழம் காய்க்கும் காலமும் முடிவடைந்துவிட்டது. அதனால் இந்த வருடக் கோடையில்தான் சுவைக்க முடிந்தது. ஆனால் கோடையில் பழம் வரும் வரை வில்வத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து காலை நேரத்தில்  தேநீராக உட்கொண்டு வந்தோம். மேலும் துளிர் இலைகளை சாலட் செய்யும் போது சேர்த்து சுவைத்து வந்தோம். இலைகளின் மணம் சற்றேறக்குறைய  மாங்காயின் மணத்தையும் வடுமாங்காயின் சுவையையும் ஒத்தே இருக்கிறது.

உலக வலைத்தளங்களில் வில்வ மரத்தினைப்பற்றி தேடிப் பிடித்து அதன் பயன்களை அறிந்து கொண்டேன். அவ்வாறு தேடிய பொழுதுதான் வில்வமரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்து பாகங்களும் நமது உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என அறிந்துகொண்டேன்.

வில்வமரம் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த மரமாகும். வெப்பமண்டலம், துணை வெப்பமணடலம் மற்றும் இமாலய மலைப்பகுதிகளில் சுமார் 500 அடிவரை உள்ள பகுதிகளில் அதிகமாக் காணப்படுகிறது. காய வைக்கப்பட்ட இல்லை, வேர் மற்றும் மரப்பட்டைகள் மருத்துவத்திற்காக பயன் படுகிறது. பீஹார் மற்றும் மேற்கு வங்கப்பகுதிகளில் வில்வமரம் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவப் பொருட்கள் செய்வதற்கும் பழக்கூழ் தயாரிக்கவும் இம்மாநிலங்களில் இம்மரங்கள் பயிரிடப்படுகின்றன.

எனது வீட்டில் உள்ள மரம் மிகவும் பெரியது. அதன் அடி மரம் வேப்ப மரத்தைப் போன்று உள்ளது. சிறிய மரக்கிளைகள் கூர்மையான முட்களைக் கொண்டதாக உள்ளது.

வில்வப்பழம் - Bael fruit

வில்வப்பழம் BaelFruit என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Aegle marmelos.

பொதுவாக வில்வப்பழம் bael, Bengal quince, golden apple, Japanese bitter orange, stone apple or wood apple என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

வில்வ மரத்தின் பழம் விளாம்பழத்தைப்போல ஓடுடன் கூடியதாக இருக்கும். கோளவடிவமாக இல்லாமல் காம்பு பகுதியும் அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும். சில பழங்கள் பேரிக்காய் வடிவத்தைப் போன்றும் இருக்கும்.

வில்வப்பழம் - Bael fruit [ Aegle marmelos ]

வில்வப் பழத்தை தரையில் ஓங்கித் தட்டி அல்லது கத்தியால் தேங்காய் உடைப்பது போல மேல் ஓட்டை உடைக்க வேண்டும். ஓட்டினுள் பழத்தின் சதைப்பற்று வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மென்மையானதாக இருக்கும். அவை நார்கள் கூடியதாகவும் ஆரஞ்சு சுளைகளைப்போல அடுக்கப்பட்டிருக்கும். சதைப்பற்று விதைகளையும் தேன் போன்ற திரவத்தையும் கொண்டதாக இருக்கும். பழம் நல்ல மணம் கொண்டதாக இருக்கிறது. வில்வப்பழத்தின் சதைப்பற்று பொதுவாக தனிச்சுவை அற்றதாகவே உள்ளது. சில பழங்கள் சிறிது புளிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். சதைப்பற்றின் நார்களை நீக்கி தண்ணீரில் கரைத்து வைத்தால் பழச்சாறு தயார். பழச்சாறு முதலில் நீர்க்க இருந்தாலும் நேரம் செல்லச்செல்ல கெட்டிப்பட்டுவிடும். தேன் போன்ற திரவத்தின் கோந்து தன்மையே இதற்குக் காரணம். இப்பழத்தின் மணம், சுவையற்றத் தன்மை மற்றும் கோந்து போல கெட்டிப்படும் தன்மை காரணமாக சர்பத் மற்றும் பழக்கூழ் செய்ய மற்ற பழங்களுடன் சேர்த்து உபயோகப் படுத்தப் படுகிறது.

வில்வப்பழம் - Bael fruit [ Vilva pazham ]

வில்வப்பழத்தில் கரோட்டினாய்டு என்ற வேதிப்பொருள் இருப்பதனால் ஆரஞ்சு வண்ணத்தைக் கொண்டதாக அதன் சதைப்பற்று உள்ளது. Tannins, அஸ்கார்பிக் acid மற்றும் riboflavin ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. அதனால் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B நிறைந்துள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இப்பழம் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் திறன் வாய்ந்தது என ஆய்வுகளின் வழியே நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது.

அதனால் வில்வப்பழம் கிடைத்தால் உடனே சுவைத்து பயன் பெறுங்கள்.

நன்கு பழுத்த பழம் எடை அதிகமாகவும் நல்ல மணமுடனும் இருக்கும்.


தேவையானவை :
2வில்வப்பழம்
2 சிட்டிகைஉப்பு [ adjust ]
2 Tbsp எலுமிச்சை சாறு [ adjust ]
1/2 Tsp மிளகுத்தூள் [ adjust ]
5 - 6புதினா இலைகள் [ விரும்பினால் ]

செய்முறை :

வில்வப்பழத்தின் ஓட்டை உடைத்து ஒரு தேக்கரண்டியின் உதவியால் பழத்தின் சதைப்பற்றை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.

2 முதல் 2 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கைகளால் அழுத்திப் பிசைந்து தண்ணீரில் கரைக்கவும்.

கரைக்கும் போது கையில் அகப்படும் நார்களை அகற்றி விடவும்.

உப்பும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

கண்ணாடி குவளைகளில் ஊற்றி புதினா இலைகளை பியித்துப் போட்டு சிறிது மிளகுத்தூளைத்தூவி சுவைக்கவும்.

வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ] - Bael fruit juice







மேலும் சில  பானம் வகைகள்
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்










No comments:

Post a Comment